பாப்பாத்தி!(சிறுகதை) -கி.தளபதிராஜ்

பெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி!. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு, வண்டி வரும் நேரத்தையும், பிளாட்பாரத்தையும் விசாரித்து இரண்டாம் பிளாட்பாரம் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ரயிலை பிடிக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தாலும் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டால் அந்த சங்கடமெல்லாம் ஒரு நொடியில் கரைந்து போய்விடும்!.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும் பசுமையான வயல்வெளியும், சிதறிக்கிடக்கும் மல்லிகை மொட்டுகளைப்போல் விளைந்து நிற்கும் நெற்கதிரில், ஒய்யாரமாய் ஊஞ்சலாடி,சிறகடித்துப் பறக்கும் வெள்ளைக்குருவிகளும், செல்லும் வழி எங்கும் நம்மைத் தொடர்ந்து வரும் அடர்ந்த காடுகளும், ரயில் சத்தம் கேட்டு துள்ளித் தெரித்தோடும் ஆட்டு மந்தைகளும் , ரயில்வே லைனை ஒட்டிய குடிசைகளில் நம்மை எதிர்பார்த்து காத்திருந்து “கை” அசைத்து வழியனுப்பும் சின்னக் குழந்தைகளின் குதூகலமும் அற்புதம்!. புதுப்புது மனிதர்களின் ரயில் சினேகம்!. முன்பின் அறியாத முகங்களோடு தயங்கித்தயங்கிப் பேசத்துவங்கி , பின் வண்டியை விட்டு இறங்கும்போது மனமில்லாமல் விடைபெற வைக்கும் அரட்டைக் கச்சேரி! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ரயிலில் பயணம் செய்வது ஒரு சுகம்னா, ரயிலுக்காக காத்திருக்கும் நேரம் கூட ஒரு சுகம் தான். அதிலும், ஆள் அரவமற்றுக் கிடக்கும் சின்ன சின்ன ஸ்டேஷன்களில் அமர்ந்திருப்பது ஒரு தனி சுகம்!. பரந்து விரிந்து சலசலக்கும் ஆலமரங்களும், அந்த சலசலப்பினூடே சின்னஞ்சிறு குருவிகள் எழுப்பும் சில்மிஷ சத்தமும், இலுப்பைப்பூவும், வேப்பம்பழமும் கலந்து தரும் கிராமத்து வாசனையும் …மனசுக்கு எத்தனை சுகம்!
சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனில் ஜன நடமாட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பலர் பக்கத்து ஊரில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்திற்குச் சென்று திரும்பியவர்கள். பெரும்பாலும் அந்தக் கூட்டம் சேலம் செல்லும் வண்டிக்காகவே காத்திருந்தது. நாகூர் வண்டி வந்து நிற்கும் இரண்டாவது நடைமேடையில் வெய்யிலின் உக்கிரம் தாங்காமல் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் புதிதாக நடப்பட்டிருந்த மரக்கன்றுகளின் நிழலில் ஒன்டியிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஆளில்லாத ஒரு மரத்தை தேடிப்பிடித்து அமர்ந்தபோது, விட்டு விட்டு வீசிய மெல்லிய காற்று அந்தப் புங்கன் மர நிழலில் கலந்து இதமாக இருந்தது.
நான் இருந்த இடத்திற்கு பக்கத்தில், கால்மேல் கால்போட்டு, ஒரு கையை தரையில் ஊன்றியபடி, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதைப்போல் படுத்திருந்த அந்த முதியவரின் அடிவயிற்றில் ஆறு மாதமே ஆன சிசு ஒன்று வெப்பம் தாங்காமல் நெளிந்து கொண்டிருந்தது. பிபி சீனுவாசும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய காதல் கீதம் அவரது கைப்பேசி வழியே அந்த இடத்தை நிரப்பியிருந்தது. அவர் அந்தப் பாடல்களை தன்னை மறந்து தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பாடல் முடிந்ததும், அந்தப்பாடலை ஒட்டி அவர் கொடுத்த “கமென்ட்” கேட்டு சிலர் சிரித்தனர்!.
கடிகாரத்தில் இப்போது மணி மூனு ஆகியிருந்தது. வெகுதூரத்தில் ஒலித்த ரயிலின் ஹாரன் சத்தம் கேட்டு வண்டிக்கு வந்தவர்கள் தங்கள் பைகளையும், மூட்டை முடிச்சுகளையும் எடுத்துக்கொண்டு, ரயில் ஏறத் தயாரானார்கள். நான் ஏறி அமர்ந்த பெட்டியிலேயே தன் தோளில் குழந்தையை சுமந்தபடி, கீழே விழாத குறையாக, தட்டுத்தடுமாறி அந்த முதியவரும் ஏறினார். அப்படி ஏறும்போது அவர் கால் பட்டு சிலர் முகம் சுளித்தனர்.

அவருக்கு முன்பே அவரது கைப்பேசி பாடல் சத்தம் அந்தப் பெட்டியில் நுழைந்தது. ஆனால் அவை இப்போது குத்தாட்டப் பாடல்களாக மாறியிருந்தது.
சிலருக்கு அந்தச் சத்தம் எரிச்சலை உண்டாக்கியிருக்கக் கூடும். அவர் தள்ளாடியதைப் பார்த்த ஒரு பூனூல் ஆசாமி “சரியான போதை கேஸ்” என்று முனுமுனுத்தார். “இங்கெல்லாம் டிக்கெட் பரிசோதகர்கள் வரமாட்டார்களா?” என குரலை உயர்த்தினார் ஒரு நடுத்தர வயதுக்காரர். சில மணித்துளிகள் அவரைப்பற்றி மறைமுகமான கிண்டலும் கேலியும் தொடர்ந்தது.

இதற்கிடையே கைப்பேசி அடிக்கடி கைநழுவி விழுவதும், பின் அதை துலாவி அவர் எடுப்பதுமான காட்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அதைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர், “பெரியவரே! டிக்கெட் எடுத்தாச்சா?” என்று நக்கலடித்தார். அந்த இளைஞரிடம் தன் சட்டைப் பையில் இருந்த ரயில்வே ஊழியர் அடையாள அட்டையைக் காட்டி “ஐ ஆம் ரயில்வே ஸ்டாஃப்” என்று பெரியவர் சீரியஸ்ஸாக சொல்ல, பெட்டியில் மீண்டும் கிண்டல் கலந்த சிரிப்பு !.

அதையெல்லாம் அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. தன் அருகில் ஒரு துண்டை விரித்து அதில் அந்த குழந்தையை படுக்க வைக்க முயற்சித்தார். தோளிலிருந்து இறக்கியதும் குழந்தை வீல் என்று கத்த ஆரம்பித்தது. கைப்பேசியில் நின்றுபோயிருந்த பாடலை மீண்டும் ஒலிபரப்பி குழந்தையின் நெஞ்சில் இதமாக தட்டிக் கொடுக்க, குழந்தை தூங்கிப்போனது.
பெரியவர் இப்போது தன் கைப்பையில் இருந்த ஒரு கதைப் புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினார். அந்த புத்தகத்தின் அட்டையில் மீசையை முறுக்கியபடி ஜெயகாந்தன், எதிரில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
அவ்வப்போது மாறிக்கொண்டிருந்த அந்தப் பெரியவரது முக பாவனை அவர் கதையில் ஒன்றிப்போயிருந்தை உணர்த்தியது. சில நேரங்களில் சில வரிகளை பிறர் காதில் விழும்படி அவர் உரக்கப்படித்தார்.
வண்டி விருத்தாசலத்தை அடைந்த போது குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. புத்தகத்தை சற்று இறக்கி குழந்தையைப் பார்த்த பெரியவர், மேலேயிருந்த “கை”ப்பையை எடுத்து அரவணைப்பாக குழந்தையின் அருகே வைத்துவிட்டு என்னை திரும்பிப்பார்த்தார். பின் வண்டியை விட்டு மெல்ல கீழே இறங்கினார். அந்தப்பார்வை “நான் வரும்வரை என் குழந்தையை பார்த்துக்கொள்” என்று என்னிடம் சொல்வது போல் இருந்தது.
வண்டி விருத்தாசலத்தில் இருபது நிமிடமாவது நிற்கும். இஞ்சினைக் கழற்றி பின் பகுதிக்கு மாற்ற வேண்டும். வெளியே சத்தமாக இருந்தது. சிலர் ‘கார்டி’ டம் ஆவேசமாக சண்டைபோட்டதை ஜன்னல் வழியாக பார்க்க முடிந்தது. “கக்கூஸில் தண்ணி வரலை. எவ்வளவு நேரம் அடக்கிக் கிட்டு இருக்கிறது?” என்று கத்தினார் ஒருவர். “தண்ணி பிடிக்காம வண்டிய எடுக்கக்கூடாது”. எங்கிருந்தோ ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. “வண்டியை ஒழுங்காக நிர்வாகம் பண்ண வக்கில்ல. இதுல வேற டிக்கட் காச ஏத்தப்போறானோலாம். மூனு மாதத்துக்கு முன்னால் பதிவு பண்ணினா ஒரு ரேட்டாம்….! மூனு நாளைக்கு முன்னாடி பதிவு பண்ணினா ஒரு ரேட்டாம்…!”. என நீட்டி முழக்கினார் வண்டிக்குள் ஜன்னலோரமாய் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஆசாமி.
வழக்கமா இந்த வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு இந்த காட்சி புதிதில்லை. பல முறை நானும் தண்ணி இல்லாமல் அவஸ்தைப்பட்டு, விருத்தாசலத்தில் தண்ணி ஏத்தச் சொல்லியிருக்கிறேன். இப்போது கூட அவர்களோடு சேர்ந்து அந்த முறையீட்டில் கலந்து கொள்ள ஆசைதான். பெரியவர் தனியாக விட்டுச்சென்ற சிசு இருக்கையில் இருந்து புரண்டு கீழே விழுந்து விடுமோ என்கிற பயம் என்னை தடுத்தது. வெளியே அதிகரித்த கூச்சலில் குழந்தை விழிக்கவும், குழந்தைக்கு வாங்கிய பாலை தலும்பாமல் ஒரு கையில் ஏந்தியபடி பெரியவர் தட்டுத்தடுமாறி பெட்டியில் நுழையவும் சரியாக இருந்தது.
அழுத குழந்தையைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டார். பால் சூடாக இருந்தது. ஒரு கையால் ஸ்பூனில் பாலை எடுத்து ஊதி ஊதி அவசர அவசரமாக ஊட்ட ஆரம்பித்தார். முதியவரின் கை நடுக்கத்தில் பால் பெரும்பாலும் கடை வாயில் வழிந்தோடியது. பாதி குடிக்கும்போதே குழந்தை மீண்டும் தூங்க ஆரம்பித்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து, அருகில் இருந்த வாஷ்பேசினில் நனைத்து, குழந்தையின் முகத்திலும் கழுத்திலும் வழிந்தோடிய பாலை மெல்ல துடைத்து பின் பழையபடியே இருக்கையில் படுக்க வைத்தார். குழந்தை தூங்கிவிட்டதை மீண்டும் உறுதிப்படுத்திகொண்டு, மறுபடியும் புத்தகத்தை கையில் எடுத்து, கதையை விட்ட இடத்தில் தொடர்ந்தார்.
அவர் இப்போது படிக்கும் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது போலும்; அல்லது அவரது வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் அந்த கதை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்!. முன்பை விட அடிக்கடி வார்த்தைகளை ரசித்து ஏற்ற இறக்கத்தோடு உரக்கப் படித்தார். அவர் உச்சரித்த வரிகளிலிருந்து அது என்ன கதை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
“என்ன பெரியவரே! ஜெயகாந்தன் கதையா? பகல் நேர பாசஞ்சர் வண்டியா?” என்றேன்.

என்னை ஒரு கனம் ஏறிட்டுப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தார்.

சின்ன வயசுல அந்த கதையை நானும்படிச்சுருக்கேன். எவ்வளவு அழகா எழுதியிருப்பார். நம்ம மாதிரி ரயில்ல போயிட்டிருந்த ஒரு மிலிட்டரி காரன்கிட்ட …அதான்… அவன் பேருகூட… “அம்மாசி”ன்னு நினைக்கிறேன்!. பசிக்கொடுமை தாங்காமல் தன் கைக்குழந்தையை அந்த மிலிட்டரிக் காரன் கிட்ட கொடுத்துட்டு ஒரு பொண்ணு செத்துப்போவாளே! அந்தக் கதை தானே?.படிச்சுருகேன். ஜெயகாந்தன் கதைன்னா நானும் ஒரு நேரத்துல தேடித்தேடி படிப்பேன்.
“ஆமாம்!.. ஒங்க பேரு என்னா? குழந்தை ஒங்க பேத்தியா?”
“என் பேரையா கேக்குறீங்க? என் பேரு இராவணன். இந்த கதையில் வர்ற மாதிரி இதுவும் ஒரு அனாதைதான். யாரு பெத்தப் பிள்ளையோ? போன வாரம் இதே வண்டியில ஏறுனப்ப தனியா கிடந்துச்சு. நமக்குத்தான் புள்ள குட்டி எதுவும் இல்லையேன்னு அணைச்சுக்கிட்டேன்”.
பெரியவரின் கண்கள் மீண்டும் புத்தகத்தில் புதைந்தது. அமைதியாகக் கடந்த சில மணித்துளிகளுக்குப் பிறகு அந்தக் கதையின் சில வரிகளை அவர் உரக்கப் படிக்கத் தொடங்கினார்.
“மூன்றாம் நாள் மத்தியானம் அந்தச் சின்னஞ்சிறு ரயில்வே ஸ்டேஷனில் தெற்கே இருந்து வரும் பகல் நேரப் பாசஞ்சர் வண்டிக்காகக் கையில் குழந்தையுடன் காத்திருந்தான் அம்மாசி.


தன் தாய்க்குச் செய்யத் தவறிய ஈமக் கடன்களை யெல்லாம் நேற்று ஒரு தாய்க்குச் செய்துவிட்டு, வாழ்க்கையில் தனக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம் போல் அந்தக் குழந்தையை இரவெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டு அந்த ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தான் அம்மாசி.


இன்று சரியான நேரத்திலேயே அந்த பாசஞ்சர் வண்டி வந்து நின்றது. தலையும் உடம்பும் ஆட்டம் கண்டு விட்ட அம்மாசி, குழந்தையோடு தனது பைச் சுமையையும் ஒன்றாய் எடுத்துச் செல்ல முடியாமல் முதலில் குழந்தையை ஜன்னல் வழியாக ஒரு அம்மாளிடம் கொடுத்துவிட்டு பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

வண்டியில் இருந்தவர்கள் எல்லாரும் குழந்தையையும் கிழவனையும் மாறி மாறிப் பார்த்தனர். ‘இந்தக் கிழவனுக்கு இவ்வளவு அழகான குழந்தை என்ன உறவு’ என்று நினைத்தார்களோ?

“பொண்ணு… மகளா, பேத்தியா?” என்று விசாரித்தாள் சன்னல் வழியாகக் குழந்தையை வாங்கிய அந்த அம்மாள்.

பிள்ளையே பெறாத அம்மாசி ஒன்றும் யோசிக்காமல் உடனே “பேத்தி!” என்று பதில் சொன்னான்.

குழந்தையின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டியவாறே மீண்டும் அந்த அம்மாள் “என்ன பேரு?” என்று வினவினாள்.

அந்த நேரத்தில் ரயில் ‘கூ’வென்று கூவிச் சிரித்தது.

‘குழந்தையின் தாயிடம் பெயரைக் கேட்க மறந்து விட்டோமே’ என்று உதட்டைக் கடித்துக் கொண்டான் அம்மாசி.

ரயிலின் கூவல் நின்ற அதே விநாடியில், தான் கண்டுபிடித்த பெயரை பிரகடனம் செய்தான் அம்மாசி: “பாப்பாத்தி!”

“பாப்பாத்தி! பொருத்தமான பேருதான்!” என்று சிலாகித்தாள் அந்த அம்மாள்.”
பெரியவர் இப்போது கதையை மேற்கொண்டு படிப்பதை நிறுத்தினார்.

நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு நிமிடம் புத்தகத்தை மூடிவிட்டு என்னை ஏறிட்டு பார்க்கிறார்.

“தம்பி என் பேத்திக்கு நான் ‘பாப்பாத்தி’ ன்னு பேரு வைக்க மாட்டேன்!.

நாளைக்கு எவனாவது ” ‘இராவணன்’ குடும்பத்துல ‘பாப்பாத்தி’ ன்னு பேரு இருக்கு. அதனால ‘பாப்பாத்தி’ ங்கிற பேரு ‘திராவிடர்’களைக் குறிக்கும் சொல்!”லுன்னு சொன்னாலும் சொல்லுவான்!”

என்ன தம்பி நான் சொல்றது சரிதானே? எனக் கேட்டு கலகலவெனச் சிரித்தார்.

ரயில் இப்போது வழக்கத்தைவிட வேகமாக‘கூக்கூக்கூ…கூ’ -வென்று கூவி சிரித்தது!

-கி.தளபதிராஜ்