திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?

“பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல், “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கிறார்.எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும்”என்று தோழர் மணியரசன் கூறியுள்ளார்!

தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு “பாப்பாத்தி” என்றும் ஆண் குழந்தைகளுக்கு “அய்யர்” என்றும் பெயர் சூட்டியுள்ளதை
பார்த்திருக்கிறோம். அவர்ககைளை எல்லாம் மணியரசன் ஆரியர் என்று கூறுவாரா?

“திராவிட்” என்பதும் “திராவிடர்” என்பதும் ஒன்றா? “சைதாப்பேட்டை”யை ஆங்கிலத்தில் “சைதாபேட்” என்று கூறுவது போல் “திராவிடம்””திராவிட்” என்பது
இடத்தை குறிக்கும்.

இந்திய தேசிய கீதப் பாடலில் வரும் பஞ்சாப,சிந்து ,மராட்ட,திராவிட போன்ற வரிகள் எதைக் குறிக்கிறது? இடத்தையா? இனத்தையா?

“திராவிட” என்ற சொல் இடம் பெற்றிருக்கும் திமுக,அதிமுக,மதிமுக,தேமுதிக ஆகிய அணைத்து அரசியல் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆகலாம்.
திராவிட என்பது இடத்தை குறிக்கும் சொல்.திராவிடர் கழகத்தில் ஒருநாளும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. காரணம் “திராவிடர்” என்பது
இனத்தை குறிக்கும்.

தென்னிந்தியாவில் பிறந்ததால் ராகுல் “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கலாம். எந்த பார்ப்பானாவது “திராவிடர்” என்று தன்னைசொல்லிக்கொண்டதுண்டா?

மனோன்மனீயம் சுந்தரனாரை பார்த்து விவேகானந்தர் “நீங்கள் என்ன கோத்திரம்?” என்று கேட்டாராம்.அதற்கு மனோன்மனீயம் சுந்தரனார் அளித்த பதில்
“தன்மானம் மிக்க தென்னாட்டு திராவிடன்”.என்பதே!

(“மனோன்மனீயம்சுந்தரனார் வாழ்க்கைவரலாறு” நூலிலிருந்து)

 

இந்துக்கள்,திராவிடர்கள்,இஸ்லாமியர்கள் மற்றும் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.திராவிடர் நாகரீகம் கலந்த பின்னர்தான்,இந்து நாகரீகத்தில்
வளர்ச்சி ஏற்பட்டது என்கிறார் தாகூர்.

(நோபல் பரிசு ஏற்புரையில் தாகூர் கூறியது).

 

மறைமலை அடிகள்தான் தனித்தமிழ் இயக்கத்தை கட்டினார் என்று கூறும் மணியரசன், திராவிடர் இயக்கங்கள் தமிழர் அடையாளத்தை அழிக்கவே
பயன்பட்டதாக கூறுகிறார். 1956 க்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள், ஆரியர்கள் உட்பட அனைவரும் தமிழர்களே என்று குறிப்பிடுகிறார்.

தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று அவரால் கூறப்படும் மறைமலைஅடிகள் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். “சாதி, சமயப்
பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய
உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனைஎதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவறிர் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.பின்னர் பெரியார்
திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர்”.என்றார்.

இப்படி தாகூரும்,மனோன்மனீயம் சுந்தரனாரும்,மறைமலை அடிகளும் சுட்டிக்கட்டிய திராவிடர் என்ற இனத்தையே முழு புசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் திராவிடர் என்ற சொல்லே பார்ப்பனர்களைக் குறிப்பது என்று கூறி, வரலாற்றையே திரிக்க பார்க்கிறார் மணியரசன்!.

தமிழ்தேசியத்தின் அசல் அக்மார்க் முத்திரை உரிமம் பெற்றிருக்கும் அவர் தற்போது “நெடுமாறனின் “தமிழர் தேசிய இயக்கமும்”,சீமானின் “நாம் தமிழர்
கட்சியும்” தமிழ்த்தேசிய இயக்கங்கள் இல்லை!” என்கிறார்

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி முகநூல் “திராவிட” என்றால் இடத்தின் பெயர் எனச் சொல்லுகின்ற நீங்கள், இதே இடத்தில் வசிக்கும் பார்ப்பானை என்னவென்று அழைப்பீர்கள்? என்று கேட்கிறது.

அமெரிக்காவில் வசித்தாலும் அய்யம்பேட்டையில் வசித்தாலும் பார்ப்பனரை பார்ப்பனர் என்றே அழைக்க முடியும்.பெரியார் வலியுறுத்தியதுதான்
தனித்தமிழ்நாடு!. திருக்குறள் மாநாடு கூட்டியவர் அவர்!. பார்ப்பனர்களிடம் இருந்து விடுதலை பெறவே திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்து.ஆனால்
சுயவிளம்பரம் தேடிக்கொள்ள ஏதோ தங்களை பெரிய புரட்சிவாதிகளாக காட்டிக்கொள்ள பார்ப்பனக் கைக்கூலிகளாக மாறி திராவிடர் என்ற சொல்லையே சிலர் விமர்சிக்கின்றனர். பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டார். பெரியாரையே விமர்சிக்கும் தோழர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?எந்த தமிழ் தேசிய
இயக்கங்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து போராடுகின்றன?

திராவிடர்கள் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல் என்று நிகழ்ச்சியின் எந்த இடத்திலேயும் மண்யரசன் அவர்கள் சொல்லவில்லை.உங்கள் செய்தி
உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று ஒருவர் கூறுகிறார்.

திராவிடர்கள் என்ற சொல் பார்ப்பனர்களை குறிக்கக்கூடியது என்கிற “மிகப்பெரீய்…ய ஆராய்ச்சி” கட்டுரை மணியரசனின் தமிழர் கண்ணோட்டம் இதழிலேயே இடம்பெற்றுள்ளது.

பல ஆண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்தி சுரண்டி வாழ்ந்த பார்ப்பனர்களும் தங்களை தமிழர்கள் என்றே கூறுகின்றனர்.அதை மணியரசனும் ஏற்றுக்கொள்கிறார். பார்ப்பனர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதில்லை.நமக்கு தேவை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை! .அவர்களை தனிமைப்படுத்தி நம் இனத்தை காப்பாற்றவே திராவிடர் என்ற அடையாள சொல் பயன்படுத்தப்பட்டது.

தமிழர்கள் மட்டும் திராவிடர்களா? அல்லது கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்களா என்று கேட்பதின் நோக்கம் புரியவில்லை!
எந்த கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை. தமிழினத்தில் பார்ப்பனர் ஊடுருவலை தடுக்கவே திராவிடர் என்ற அடையாளச்சொல்.

“தமிழர்” என்ற ழகர ஒலிச் சொல்லை, சரியாக ஒலிக்கத் தெரியாமல் “த்ரமிள” என்றும் பின்னர் “திராவிடன்” என்றும் ஆரியன் எழுதியதையும், பேசியதையும்
ஆதாரமாகக் கொண்டு, தம்மையே “திராவிடன்” என அழைத்துக் கொள்வது தான் அறிவு நாணயமான செயலா? எனக்கேட்கும் தோழர்களே  “தேயம் என்பது
தான் தேசம் ஆனது “என்று எந்தப்பாவாணர் கூறியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அதே பாவாணர் தான் மேற்படி தமிழர்-திரமிளர் -திராவிடர் செய்தியும்
குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள்தான் உண்மையான தமிழ்த்தேசிய வாதிகள் என்று கிளம்பியிருக்கும் தோழர்களே உங்கள் பிரச்சனை என்ன? உங்கள் இடைவிடாத கடுமையான தொடர்
போராட்டத்தின் விளைவால் அமையப்போகும் “தமிழ்தேசியத்தை” எந்த திராவிடர் இயக்கமாவது அல்லது தோழர்களாவது தடுக்கும் வேளையில்
ஈடுபடுகிறார்களா? “தமிழ்த்தேசியம் கூடாது” திராவிடநாடுதான் வேண்டும் என்று எந்த தோழராவது மல்லுக்கு நிற்கின்றனரா?

அல்லது திராவிட இயக்கங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் பண்ண  முடியவில்லையே என்கிற ஆதங்கம் தான் உங்களை இப்படி பேசவைக்கிறதா?